Wednesday, January 28, 2009

MLA - STOP Bt Brinjal Today!

பி.டி கத்திரியை தடுக்க உங்களால் முடிந்ததை
இன்றே செய்க ! நன்றே செய்க !


பெருமதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு:


மரபணு மாற்று உணவு என்பது கிருமிகளான பாக்ட்டீரியா வைரஸ் மற்றும் பூச்சிகள் போன்றவற்றின் மரபணுகளை எடுத்து அரிசி, சோளம் போன்ற தானியங்களிலும் கத்திரி உருளை போன்ற காய்கறிகளிளும் திணிக்கப்பட்டு உருவானதாகும்.


மரபணு மாற்று பயிர்கள்-உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், மண் வளத்தினை அழிக்கும், சுற்றுச் சூழலை பாதிக்கும், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும்.


மண்ணையும் மனிதனையும் மலடாக்கும் மரபணு மாற்றம்:

மரபணு மாற்ற உணவுகளை உட்கொண்ட சோதனை எலிகளுக்கு உள் உறுப்புகள் வளர்ச்சி பாதிப்பு, திசுக்கள் பாதிப்பு நோய் எதிர்புச் சக்தி குறைதல், ஒவ்வாமைப் பிரச்சிசினைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல்களில் நச்சுத்தன்மை,- இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமீபத்திய ஆய்வுகளில் கருவுறுவதிலும் மகப்பேற்றிலும் தீவிர பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களாக மரபணு மாற்ற பி.டி பருத்தியினால் விவசாயிகளுக்கு எந்த இலாபத்தையும் தர முடியவில்லை என்பதற்கு ஆண்டுதோறும் பெருகி வரும் பருத்தி விவசாயுகளின் தற்கொலைகளே சாட்சி. அது மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கில் ஆடு மாடுகள் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா என்று பல்வேறு இடங்களில் இறந்து போனதற்கும் பி.டி பருத்தியே காரணம் என பல கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.


முதலில் கத்திரி அடுத்து...

இத்தகைய ஆபத்தான மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, உளுந்து, துவரம்பருப்பு, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பப்பாளி போனறு 41க்கும் மேலான உணவுப்பொருட்களில் 170க்கும் மேலான மரபணு மாற்ற ரகங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.


தமிழர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயில் மரபணு மாற்றம் விரைவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. மான்சான்டோ நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான மஹிகோ, சந்தையில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Bt கத்தரிக்காய் மனிதர்களுக்கு மிகவும் ஏற்றது என்று கூறி வருகிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனிப்பட்ட வல்லுனர்கள் இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று நிரூபித்துள்ளனர். ஆயினும் மத்திய அரசு இதை விற்பனைக்கும் அனுமதிப்பதில் முனைப்போடு உள்ளது.

தமிழக வேளாண் பல்கலையா இல்லை மான்சாண்டோ கைக்கூலியா?

இத்தகைய ஆபத்தான பயிர்களை உருவாக்குவதிலும் அங்கீகரிப்பதிலும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மான்சான்டோ என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்தின் கைக்கூலி நிறுவனமாகவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாறிவிட்டது.


தமிழர்களின் பாரம்பரிய அறிவுச்சொத்தான பல இயற்கை தானியங்களை வளர்த்தெடுக்காமல், அவற்றை அழித்தொழிக்கும் நோக்கதோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழக வேளாண் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு அவசியமான ஆய்வுகளை விடுத்து மான்சாண்டோவிற்கு இலவசமாக மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு ஆய்வு செய்து வருகிறது. இது இன்று மட்டுமன்றி முன்னர் கத்திரிக்காய்க்கும் நடை பெற்றது. இது தொடர்ந்தால் பல்கலைகயும், மக்களின் வரிப்பணமும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு ஒப்ப்ந்தப் ஆய்வுகமாகும் சூழ்நிலையில் உள்ளோம். இது உடனடியாக தடுக்கப்படவேண்டும்.


தமிழகம் மரபணு மாற்றத்தை தடை செய்ய வேண்டும்

தமிழகம், கேரள மாநிலம் போன்று வேளாண்மையில் தங்கள் உரிமையை நிலைநாட்டி மரபணு மாற்ற உணவுகளை தடை செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை எல்லோர்க்கும் தேவையான உணவைக் கொடுப்பதுடன் மண்ணின் வளத்தையும் உழவனின் வாழ்வையும் காக்கும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்து தமிழக வேளாண் கொள்கையினை இயற்கை வேளாண் கொள்கையாக மாற்ற வேண்டும்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அங்கத்தினர்களாகிய மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வர்த்தகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், நுகர்வோர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் தாங்கள் கீழ்க்கண்ட வேண்டுகோள்களை ஏற்று அரசினை செயல்படுமாறு வலியுறுத்த வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்:

  • மரபணு மாற்று பயிர்களும், அவற்றின் கள ஆய்வுகளும் உடனடியாக தடைசெய்யப்பட/நிறுத்தப்பட வேண்டும்.
  • மரபணு மாற்று பயிர்கள் மீது நீண்டகால பாதுகாப்பு ஆய்வுகள் நடத்திய பின்னரே கள ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும்.
  • அரசின் வேளாண் பல்கலைக்கழகங்கள், தனியாருடன் இணைந்து மரபணு மாற்று சோதனை செய்வதை கைவிட வேண்டும்.
  • மருத்துவ மூலிகைகள், அரிசி, கோதுமை போன்ற முக்கிய பொருட்களின் மீதான மரபணு மாற்று ஆய்வுகளை தடை செய்ய வேண்டும்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக விவசாயிகள் சங்கம் (இ.உ.உ.கட்சி), தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, பூவுலகின் நண்பர்கள், தோழமை, கீரீன்பீஸ், தமிழ்நாடு தன்னார்வ நலக் குழுமம், , தமிழக விவசாயிகள் சங்கம்., தமிழ்நாடு விவசயிகள் சங்கம். ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, இந்திய இயற்கை விவசாயிகள் இயக்கம்., சர்வோதைய இயக்கம்.

No comments: